×

அசன் மவுலானாவை ஆதரித்து கே.எஸ்.அழகிரி வாக்கு சேகரிப்பு

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானாவை ஆதரித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று திருவான்மியூர் நாகாத்தம்மன் கோயில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது,  அவர்  பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்தால் தான் இன்றைக்கு இருக்கிற விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும். காங்கிரஸ் ஆட்சியின்போது மன்மோகன்சிங் பெட்ரோல்,  டீசல் விலையை குறைத்து  காட்டினார். ஆனால் தற்போது மத்தியில் உள்ள பாஜக மற்றும் தமிழகத்தில் உள்ள அவர்களது கூட்டணி கட்சியான அதிமுகவால் முடியவில்லை. இவர்கள் சுங்கவரியை குறைக்கவில்லை. இன்றைக்கு சமையல்  எரிவாயு விலை உயர்வை  இல்லத்தரசிகள் தாங்க முடியாத சூழலில் உள்ளனர்.

இதில் மோடியும், எடப்பாடியும் தோல்வி அடைந்துள்ளனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியால் மட்டுமே விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும். அதற்கு, இந்த தொகுதியில் வேட்பாளர் அசன் மவுலானாவை   வெற்றிபெற செய்ய வேண்டும், என்றார். சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அடையாறு துரை, மதிமுக சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழக குமார்,  திமுக பகுதி செயலாளர்கள் சேகர், துரை  கபிலன்,  மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags : KS Alagiri ,Asan Maulana ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...